வீட்டு சாமி கும்பிடும் வைபவம்.
பேசி முடித்து, வெற்றிலை பாக்கு பரிமாறியவுடன், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் வீட்டு சாமி கும்பிடவும். அவரவர்கள் வழக்கப்படி 11 அல்லது 7 இலை போட்டு கும்பிடவும். மாக்கோலம், செம்மண் போட்டு, தலைப்பலகையில் கோலம் போட்டு வைக்கவும். ஒவ்வொரு பலகையின் பின்னால் சுவற்றில் மஞ்சள் 3 கோடு போட்டு குங்குமம் வைக்கவும். நிறைநாலி நெல் வைத்து, விளக்கு, மஞ்சப்பிள்ளையார் வைக்கவும். பலகையில் 3 தலைமுறை, அப்பா, தாத்தா, தாத்தாவுக்கு அப்பா, அம்மா, அப்பத்தா (தாத்தாவுக்கு அம்மா) ஆணுக்கு வேட்டி, சேலை (சுங்குடி கருப்பில்லாம), சுமங்கலியாக இல்லை என்றால் வெள்ளை சேலை அவரவர் வழக்கப்படி சேலை எடுக்கவும். சிறு பெண் குழந்தை, பையன் என்றால் அவர்களுக்கும், கவுன், சட்டை, டிராயர் எடுக்கவும், துணிகளை நனைக்கும் பழக்கம் இருந்தால் முதல் நாளே நனைத்து காய வைத்து, மஞ்சள் தடவி, யாரும் தொடாமல் எடுத்து வைக்கவும். கோடி வைக்கும் பழக்கம் இருந்தால் கோடி வைக்கவும். 2 இலை (நுனி)யில் அடியில் சிறிது நெல் போட்டு இலையை பலகையின் முன் விரித்து, கத்திரி, வாழைக்காய் பொரியல் கூட்டு, மிளகு பச்சடி, பருப்பு, பணியாரம், பருப்பு உருண்டை, முறுக்கு, பச்சை முறுக்கு, அவர்களுக்கு பிடித்த பிஸ்கட், பஜ்ஜி, வடை எல்லாமே வைக்கவும். பின் பலகையில் வேட்டி, சேலையை வைத்து சுமங்கலி என்றால், தாலியும், பூ, வெற்றிலை வைத்து வாசனை சாமான் அரைத்ததை உருட்டி வைத்து, பின் இலையில் சாதம் படைத்து, பருப்பு போட்டு பனியாரம், பருப்பு உருண்டை, முறுக்கு வைக்கவும். தேங்காய், பழம் 2, வெற்றிலை, பாக்கு வைத்து படைக்கவும். பின் சாம்பிராணி போட்டு, தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி கும்பிடவும். பின் பனியாரம், பருப்பு உருண்டை, முறுக்கு எல்லாவற்றையும் எடுத்து எல்லோருக்கும் கொடுக்கவும். இலையில் உள்ள சாதத்தையும், காய்களையும் பங்காளிகாரர்களுக்கு எடுத்து பரிமாறவும். ஒவ்வொரு இலையும் எடுத்து போட்டுக் கொள்ளவும். விளக்கின் முன் ஒரு இலையில் உள்ள சாதம் மட்டும் வைத்து மறுநாள் காக்கைக்கு வைக்கவும். சட்டியில் உள்ள பாலை மறுநாள் காலை செடியில் ஊற்றவும். எல்லா பெண்களுக்கும் வாசனை சாமானை எடுத்து உருட்டி, வீட்டிற்கு போகும் போது கொடுக்கவும். சாயங்காலம் சேலை, வேட்டியை எடுத்து மகன், மகள், பங்காளிகாரர்களுக்கு கொடுத்து, உடுத்தி, கோவிலுக்குச் செல்லவும். வாசனை சாமான் அரைக்க மஞ்சள்கிழங்கு, வசம்பு, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள்.